மணி விழாவில்- எண்ணற்ற வித்துக்களுக்கு உரமிட்டவனை நீட்டி....

யோகப்பா!
யோசிக்கும் முன்னே-பின்
சோதியொடு தெரிகின்ற
உம் உருவம்
தொலை தூரமாய் விரிகின்ற
பச்சை நாட்களுக்குள்
நிலையாய் உம்மோடான நினைவுகள்....
குருத்தெறிந்து கிளைபரப்பி
நிழலும் நிம்மதியும் கொடுத்து
பெருவிருட்சமாய்
அவை எங்களுக்கானதாய்-எம் 
நல்ல ஆசானே....

சோகங்களை சுகந்தங்களாக்கியவன்
நரிகளின் நாத ஒலிகளைப்
பரிவு செய்து காத தூரத்தே
சலசலத்து ஒலிக்கும்
கவிதைகளாக்கியவன்
நல்ல திசை இதுவென்று
நன்னெறி ஊட்டியவன்
பாசத்தின் வலைக்குள்
பிதாவாய்- எம்
பக்கங்களையே சுமந்தவன்....!

பித்துக்கள் இடித்தெம்மை
சரித்த போதும்-பார்த்து
எத்தனை இடர்கள் தான்
சிரித்த போதும்
அத்தனையும் ஒடித்து
தன் ஒற்றை விரலால் சுட்டி
வித்தைகள் பல காட்டியவன்....

சுட்டெரித்த வெயிலிலும்
சுழன்றிட்ட காற்றிலும்
பட்டுழன்ற இன்னல்
பாரா நடுகையாளன்
கடலாய் அதன்
கம்பீரம் முழக்கும் அலையாய்
தடம் பதித்ததொரு
தார்மீக நடையாய்
விடை பெற்றுச் செல்கின்றான்
கூறு போட முடியாத
கொள்கையோடு....
வீறுகொண்ட பெருக்கொன்று
தனதென்று....

-அருள்நிலவன்

Comments

Popular Posts