பிறப்பெடுத்துப்போன பேனா....2



குட்டை உயிரைத் தாங்கி
என் சட்டைப் பைக்குள்
ஒரு குறைப்பேனா
உதிரம் தோய்ந்து காய்ந்து ....


இதயக்கூட்டின் போர்வைக்குள்
வாழ்க்கைப்பட்டதால்
இரண்டும் ஒரே நிறத்தையே
தீட்டிக்கொள்கின்றன....

பேனாவின் எழுத்துக்களிலும்
இதய நிறத்தின்
கதவிடுக்குக் கசிவு
தடுப்பாரற்றுப் போனது....

அது தன் உணர்வுகளை
அழுதழுது களைத்து
அடக்கிகொள்கிறது....

மீதமிருக்கும் சீதனம்
வெறும் தசைப் பிண்டத்தின்
பிரசன்னமே!

இது காறும் விழிதழுவியிருந்தும்
ஆக்கிரமிபாளனாய் -அந்த
அக்கிரமத்து நிறம்....!

இப்போது பேனா மட்டும்
விழித்துக் கொள்கிறது
தப்பாமல்
ஈர விழி எனினும்....!

தன் உந்து விசை
தன்னைப் பலவீனனாக்கும்
என்பது-அப்பாவி
அந்தப் பேனா
அறியாத ஒன்றல்ல....

மனித வாழ்வு மகத்துவத்தை
பலதடவை
பேனாதானே அகப்படுத்திப்
போகிறது....!!

தன் ஒவ்வொரு துளிகளும்
தூளிக் கயிற்றிற் தொங்கும்
குழவி(யின்) வளர்ச்சி(யின்)
மகிழ்வென்று -அந்தப் பேனா
களியாததொன்றல்ல....

அது அணைகட்டிய
அணிலின் செருக்கொடு
கடமையின் நிமித்தம்
இழப்பொடும் பொருதபடி
தன் நிறமெனும் அணியொடு
வகுத்துக்
கொண்டுதானிருக்கிறது.....!!

-அருள்நிலவன்

Comments

Popular Posts