இழி வழக்கொழிப்போம் வாடி பெண்ணே!


நீல வானம் நீண்டு புகழ்பரப்பும்
ஆழக்கடல் தேடியறியாப் புதையல் சுமக்கும்
பரிதிவடியும் அந்தி- மறுநாள் விடியலுக்காய் விழிகொள்ளும்
மாரிக்குளிர் தமையொடுக்கி உறக்கம் கொள்ளும்
பூரிப்படி மாதர் பிறப்பு- மடையாளைத்
தேடிப் பிடித்துக் கும்மியடியென் மங்களமே!

தாரமானாய் தான் சுமக்கும் தாங்கியானாய்
வீரமாதாய் போருக்கு விதையிட்டாய்- முறம் கொண்டு
உரமாய் தனயர் தோள் சுமந்தாய்
தீரமாய் நீ தீர்க்கும் தியாகத்தால்
கோரமும் கொடியிறக்கிக் கும்பிடட்டும்-மடையாளே!
ஆடிக் களித்துக் கும்மியடியென் மங்களமே!

தேயிலைத் தோட்டத்தின் திரட்சியில் நிறைவாய்
சேய்கள் சிந்தும் மழலையில் உறைவாய்
காயும் உன்னுடல் கொண்டு திறப்பாய்
நாயிற் கீழானவெம் மனித வாழ்வென்று
பாயிற் சோம்பலை முறித்தெழுந்து- மடையாளே!
கூடிக் குழைந்தடியென் மங்களமே!

-அருள்நிலவன்

Comments

Post a Comment

Popular Posts