மீண்டுமொரு பொழுது....2013.01.01

இன்னும் ஒரு நாள் உதயமாகியிருக்கிறது. சுகங்களை மட்டுமே சொப்பனமாக்கியபடி வாழ்வு நகர்கிறது. அதன் வேகத்தைப் பற்றி எமக்கு எவ்விதக் கவலையும் இல்லை. ஆமை வேகமென்ன? பூனை வேகமென்ன? பொழுது போக்காட்டினாற் சரி போகட்டும் என்று தான் எங்கள் மனங்கள் பேசிக்கொள்கின்றன.

போன வருடம் இனிமேல் வரப்போவதில்லை. தேய்ந்து போன தேகங்களும் திரும்பிப் பார்க்கப்படவும் போவதில்லை. தீராத தாகம் தான் நெஞ்சைப் பிளக்கிறது. தில்லாலா கானங்கள் தான் காதில் ஒலிக்கிறது.

சொல்லாமற் கொள்ளாமல் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின நாழிகைகள்....! இந்த நாளுக்குத்தான் எத்தனை எதிர்பார்ப்புக்கள்?? எத்தனை சிறப்புக்கள். குடும்பத்தின் முதற்பிள்ளையில் பாசம் கூட இருப்பது இயல்பு தானே!!

போன வருடம் போனது தான் ஆயினும் பெரிதாய் எதை வெட்டிகிழித்தோமோ அறியோம் என்ற நிலைப்பாடுதான் பலருக்கு....

இந்த வருட வெட்டிக் கிழிப்புக்கு இப்பொழுதே புறப்பட்டு விட்டோம். உலக அழிவுமில்லை, உருப்படியான நிலையுமில்லை. அழியுமா? அழியாதா? என்ற கேள்விகளிலே நாம் தொலைத்துப் போன நாட்களை யாரப்பா வந்து துடைப்பார்?

என்ன செய்ய வேண்டும்:
இந்த வருடம் உங்கள் குடும்பங்களில் அன்புக்காகவும் வினாடிகளைச் செலவழியுங்கள். உங்கள் நண்பர்களோடு உறவாடவும் நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை திட்டமிடலில் இருக்கட்டும். பாதிதான் ஆகுமென்றாலும் பரவாயில்லை. மீதி பெற்றெடுத்த அனுபவத்தால் மீண்டும் நிரப்பப்படும்.

தேதியொன்று தேதி தான், தீர்க்கமாய் அதனை ஆக்கும் வரைக்கும். மீதியென்று வைத்துவிட்டால் உங்கள் சேதியென்ற ஒன்று இல்லாது போகுமப்பா இவ்வுலகில்....

சிந்திப்பீர்.... செயற்படுவீர்..... செயற்படுவோம்....!

-துஜீவ் வாத்தியார்

Comments

Popular Posts